நியூசிலாந்து , இந்தியா மோதும் டி-20
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தற்போது ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் அடங்கிய சுற்றுத் தொடரில் விளையாடி வருகின்றது. ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டம் நேற்று மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த டி-20 தொடர் இந்த வருடத்தில் இந்தியா ஆட இருக்கும் கடைசி டி-20 தொடர் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டி-20 போட்டியின் இந்திய அணி அறிவிப்பு
இந்த நிலையில் நியூசிலாந்து அணியுடன் மோதும் இந்திய டி-20 அணியின் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. 15 பேர் கொண்ட கோஹ்லி தலைமையிலான அணியில் வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. மனிஷ் பாண்டே, கே எல் ராகுல், அக்சர் பட்டேல் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த டி-20 அணியில் புதிதாக ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் என இரண்டு பிளேயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நெஹ்ராவும் இந்த அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஷ்ரேயஸ் ஐயர்
இந்திய அணியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயர் மும்பையை சேர்ந்தவர் ஆவார். 2014 மற்றும் 2015 ரஞ்சி போட்டியில் மும்பை அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் 2014ல் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடினார். இவரது சிறப்பான ஆட்டத்தால் 2015ல் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக 2.6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இடது கை பேட்ஸ்மேனான இவர் இடது கை ஆப்- பிரேக் பவுலரும் என்பது கூடுதல் சிறப்பு.
யார் இந்த முகமது சிராஜ்
தெலுங்கானாவை சேர்ந்த முகமது சிராஜ் 2015 இறுதியில் ஹைதராபாத் ரஞ்சி அணிக்காக விளையாடினார். மிகவும் சிறப்பாக பந்து வீச கூடிய இவர் இந்த வருட ரஞ்சி போட்டியில் மிக அதிகமான விக்கெட்டுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹைதராபாத்தில், சன் ரைசர்ஸ் அணிக்காக 2.6 கோடியில் ஏலம் எடுக்கப்பட்டார். இடது கை பந்து வீச்சாளரான இவர் இந்திய அணியில் புதிய சாதனை படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.