நாக்பூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இலங்கை அணி, இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு சுருண்டுள்ளது.
இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. சென்ற போட்டியில் மிகவும் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமிக்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். சென்ற போட்டியில் சரியாக பந்து வீசவில்லை என்ற களங்கத்தை இதன்முலம் அவர் மாஸாக துடைத்துள்ளார். அஸ்வினின் சூழலில் எப்போதும் திணறும் இலங்கை வீரர்கள் இந்த போட்டியிலும் மோசமாக திணறினார்கள்.
ஒருபக்கம் அஸ்வின் கலக்க இன்னொரு பக்கம் இஷாந்த் சர்மா, ஜடேஜா இருவரும் தெறிக்கவிட்டனர். இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். இவர்களின் கூட்டு தாக்குதலை சமாளிக்க முடியாத இலங்கை மண்ணின் மைந்தர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள்.
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.