டெல்லி: காயம் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடர்லி முரளி விஜய் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய். ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இந்த காயத்தால் ஐ.பி.எல். தொடரிலும் முரளி விஜய் பங்கேற்கவில்லை. இதனிடையே லண்டனில் சிகிச்சை பெற்று திரும்பிய முரளி விஜய் ஓய்வில் இருந்து வந்தார். முரளி விஜய்யின் காயம் குணமடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு மணிக்கட்டில் வலி இருப்பதாக உணர்ந்தார். அவரை பரிசோதித்த பிசிசிஐ மருத்துவக் குழு, ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியது. இதனால் இலங்கை தொடரில் அவர் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் இடம்பெறுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்மூலம், கடந்த அக்டோபர் 2016க்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ஷிகர் தவான் தற்போது மீண்டும் இடம் பெற்றுள்ளார்.