மும்பை : கிரிக்கெட் சீர்திருத்தம் குறித்து நீதிபதி லோதா குழு தெரிவித்த பரிந்துரைகளை செயல்படுத்த பிசிசிஐ, 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு இடம் கிடைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழு கிரிக்கெட் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
இதை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பாக கூறிவிட்டது. இந்த நிலையில் லோதா கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்த 7 பேர் கொண்ட சீர்திருத்தகுழு அமைக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ இக்குழுவை அமைத்துள்ளது. இரு வாரங்களில் இக்குழு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த அம்சங்கள் அதில் இருக்கும்.
சீர்திருத்தகுழு 2 நாட்களில் தனது பணியை தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் சவுரவ் கங்குலியும் ஒருவராகும். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுப்ரீம் கோர்ட்டில் லோதா கமிட்டி குறித்த வழக்கு ஜூலை 14ம் தேதி மீண்டும் வர உள்ளது. எனவே பிசிசிஐ குழு, ஜூலை 10ம் தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியின் தலைவர் ராஜிவ் சுக்லா. உறுப்பினர்கள், கங்குலி, டி.சி.மாத்யூ, நபா பட்டாச்சார்ஜி, ஜே ஷா, அனிருத் சவுத்ரி (பிசிசிஐ பொருளாளர்), அமிதாப் சவுத்ரி (ஒருங்கிணைப்பாளர்). இவ்வாறு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியிலும் சச்சின், லட்சுமணன் ஆகியோருடன் கங்குலியும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.