கொழும்பு: 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியாவிடம், இலங்கை தோற்றது குறித்து புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது.
அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் டக் அவுட்டானார். சச்சின் 18 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் கவுதம் கம்பீர், கோஹ்லி, கேப்டன் டோணி, யுவராஜ்சிங்கின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் சச்சின், சேவாக் விரைந்து அவுட்டான உடன் இலங்கை வென்றுவிடும் என அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டோணி, கம்பீர் ஆட்டம் மற்றும் கோஹ்லி கொடுத்த பார்ட்னர்ஷிப் ஆகியவை இந்தியாவுக்கு வெற்றியை ஈட்டித்தந்தன.
பைனலில் இந்தியாவிடம், இலங்கை தோற்ற விவகாரத்தில் மர்மம் இருப்பதாக அந்த நாட்டு அணி முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்புவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயசேகரா, இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை உத்தரவிட தயாராக உள்ளதாகவும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உகந்ததாகும் என்று தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என்றும் ஜெயசேகரா உறுதியளித்தார்