திருவனந்தபுரத்தில் டி-20 போட்டி
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று இரவு நடந்தது. மழை காரணமாக தடைபட்ட இந்த போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் இந்தியா பேட் செய்து 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 67 ரன்கள் எடுத்தது. 68 என்ற இலக்கை விரட்டிச் சென்ற நியூசிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மல்டி பர்போஸ் ஸ்டேடியம்
நேற்று இந்த போட்டி நடந்த திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரின்பீல்ட் இண்டர்நேஷனல் ஸ்டேடியம் அனைத்து விதமான போட்டிகளும் நடக்கும் மைதானம் ஆகும். இங்கு கடந்த சில வருடங்களாக கால்பந்து போட்டி மட்டுமே நடைபெற்று வந்தது. இதையடுத்து கேரள கிரிக்கெட் சங்கம் இந்த மைதானத்தை கிரிக்கெட் போட்டிகளுக்காக குத்தகைக்கு எடுத்து பராமரித்தது. எந்த மழை பெய்தாலும் 10 நிமிடத்தில் நீர் வடியும்படி இது வடிவமைக்கபட்டது. அதனை காரணமாகவே நேற்று 8.30க்கு மழை நின்றதும் 9 மணிக்கு போட்டி தொடங்க முடிந்தது.
மழை நிற்க வேண்டும்
திருவந்தபுரத்தில் கடந்த மூன்று நாளாக பெய்த மழை இந்த போட்டிக்கு இடைஞ்சலாக இருந்தது. இந்த நிலையில் மழையில் பிறந்து மழையில் வாழும் மலையாளிகள் முதல்முறையாக மழை நிற்க வேண்டும் என வேண்டினர். இதற்காக திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற பழவங்காடி கணபதி கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்தனர். இந்துக்கள் மட்டும் இல்லாமல் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் அங்கு சென்று வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் போட்டியில் சேட்டை செய்த சேட்டன்கள்
30 வருடங்களுக்கு பின் திருவனந்தபுரத்தில் நடத்த ஐசிசி போட்டி என்பதால் இதற்கு மிகவும் அதிக அளவில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 50,000 பேர் அமரும் கொள்ளளவு கொண்ட மைதானத்தில் 45,000க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றன என்பது குறிப்பிடத்தக்கது. மைதானத்துக்கு வந்த ரசிகர்கள் ஒவ்வொரு பாலுக்கும் கூச்சலிட்டு உற்சாகப்படுத்தினார். செண்டை மேளத்தையும், ஐபிஎல் விசிலையும் இடையில் இடையில் அடித்து மாஸ் காட்டினார். செண்டை மேள சத்தம் பதற்றத்தை மறந்து இந்திய வீரர்களின் கால்களை தானாக ஆடச் செய்தன. இந்தியா பெற்ற வெற்றிதான் அந்த துடிப்பான ரசிகர்களுக்கு சிறந்த பரிசாக இருக்க முடியும்.