மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது கேப்டன் விராட் கோஹ்லியின் பரிந்துரையால் நடந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயிற்சியாளர் பதவியிலிருந்து, கும்ப்ளே விலகியதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா-இலங்கை போட்டிகளில் இருந்து தனது முதல் பயிற்சியாளர் பணியை தொடங்குகிறார் ரவி சாஸ்திரி. கங்குலி, சச்சின், லட்சுமணன் ஆகியோர் அடங்கிய மூவர் குழு ரவி சாஸ்திரியை பயிற்சியாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
ரவிசாஸ்திரி கேப்டன் விராட் கோஹ்லியின் ஆதரவை பெற்றவர் என்பதால் பயிற்சியாளரை இறுதி செய்யும் விவகாரத்தில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை இருந்ததாக கூறப்பட்டது.
மும்பை பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற நேர்காணலுக்குப் பிறகு முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், " ரவி சாஸ்திரி, சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால் சந்த் ராஜ்புத் ஆகியோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. பயிற்சியாளர் யார் என்ற முடிவை அறிவிக்க அவசரம் தேவையில்லை. அதற்கு சில நாள் கால அவகாசம் தேவைப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்றே ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள செய்திகள் கிரிக்கெட் உலகை பரபரக்க வைத்துள்ளது. விராட் கோஹ்லி, தனது அணிக்கு ரவி சாஸ்திரிதான் பயிற்சியாளராக வரவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.