சுரங்கா லக்மல் அபாரம்
அதிலும், வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்கு ஆரம்பம் முதல் ஷாக் கொடுத்தார். போட்டிக்கு பிறகு லக்மல் நிருபர்களிடம் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
40 ரன்னுக்கு தாங்காது என நினைத்தோம்
சுரங்கா லக்மல் கூறியுள்ளதாவது: 29 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்து இந்தியா தத்தளித்தது. அப்போது நாங்கள் இந்தியாவை 40 ரன்னுக்குள் சுருட்டி விடுவோம் என்று நினைத்தோம் என்று கூறியுள்ளார். அப்படி நடந்திருந்தால் அது இலங்கைக்கு ஒரு சாதனையாக மாறியிருக்கும்.
கதையே வேறு
சுரங்கா லக்மல் மேலும் கூறுகையில், இந்திய அணியை சுருட்டிவிடலாம் என நாங்கள் நினைத்திருந்த நேரத்தில் டோணி சிறப்பாக பேட்டிங் செய்தார். டோணியை மட்டும் விரைவில் வெளியேற்றியிருந்தால், நாங்கள் இந்தியாவை மிக மோசமான ரன்னுக்குள் சுருட்டியிருப்போம்.
டோணி சிறந்த வீரர்
டோணி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். இதற்கு முன்பும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் அவர் பல முறை சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே டோணியால் எங்களது நோக்கம் தகர்க்கப்பட்டது.
தொடர் வெற்றி
அதேநேரம் எங்களுடைய எண்ணம் இந்த தொடரில் வெற்றி பெறுவதுதான். முதல் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து நாங்கள் பெரிய அளவில் மகிழ்ச்சியடைந்து நிற்கவில்லை என்றார் சுரங்கா லக்மல்.
அபார பந்து வீச்சு
சுரங்கா லக்மல் தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீசினார். 4 மெய்டன் ஓவர்கள் அதில் அடங்கும். 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்திய பவுலர் இவர். ஆனால், டோணியிடம் இலங்கை ஜம்பம் பலிக்கவில்லை. டோணி 65 ரன்கள் விளாசியிருந்தார்.