7 அணிகளுடன் மோதும்
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா ஒரு முறை மோதி வருகின்றன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 18, 20 தேதியிலும், இறுதிப் போட்டி ஜூலை 23-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
3-ஆவது ஆட்டம்
இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகளுடன் மோதிய இந்தியா முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழலில் இன்று 3-ஆவது ஆட்டமாக பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதியது. டெர்பி நகரில் உள்ள கவுன்ட்டி மைதானத்தில் டாஸ் போடப்பட்டது. அதில் இந்தியா வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் பந்து வீசியது.
ரன் குவிப்பில் தடுமாற்றம்
தொடக்கம் முதலே இந்திய அணியினர் ரன் குவிப்பில் தடுமாறி வந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்துள்ளது.
170 ரன்கள் என்ற இலக்கு
அடுத்து களம் இறங்கவுள்ள பாகிஸ்தான் அணி 170 ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது. இதுவரை பாகிஸ்தானை எதிர்கொண்ட 8 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. இன்றைய போட்டியில் மோசமான ரன்கள் குவித்திருந்தாலும் பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
தெறிக்கவிட்டது
எதிர்பார்த்த படியே இந்தியா சிறப்பாக பீல்டிங் செய்தும், பந்து வீசியும் பாகிஸ்தானை கலங்கடித்தது. மொத்தம் 10 விக்கெட்டுகளுக்கு, 38 ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் 74 ரன்களை எடுத்தது. பாகிஸ்தானுடன் மோதிய 9-ஆவது போட்டியிலும் இந்தியாவே தெறிக்கவிட்டது. 100 ரன்களைக் கூட தாண்டவிடாமல் இந்தியாவின் மகளிர் அணியினர் அபாரமாக ஆடினர். 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானுடனான ஐசிசி 9வது போட்டியிலும் இந்தியா அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.