டெல்லி: பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை பைனலில், இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. முதல் முறையாக இரண்டு ஐரோப்பிய அணிகள் பைனலில் மோதுகின்றன.
பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் பங்கேற்றன.
நேற்று நடந்த அரை இறுதியில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் கடந்தாண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த மாலி அணியை வென்றது. மற்றொரு அரை இறுதியில், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து அணி முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது.
நான்காவது முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. ஸ்பெயின் அணி, 1991, 2003, 2007ல் பைனலுக்கு முன்னேறியுள்ளது. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
வரும் 28ம் தேதி கோல்கத்தாவில் பைனல் போட்டி நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. முதல் முறையாக ஐரோப்பாவைச் சேர்ந்த அணிகள் பைனலுக்கு நுழைந்துள்ளன. மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பிரேசில், மாலி அணிகள் மோத உள்ளன.