டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த வாரம் துவங்கியபோது, நமக்கெல்லாம் ஜெயிக்கிற சான்சே இல்லை என்று பேசியவர்கள் கூட, அடடா கலக்குறாங்கப்பா என்று கூறும் அளவுக்கு இந்திய அணியின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக விளையாடும் இந்திய அணி, டெல்லியில் இன்று நடக்கும் ஏ பிரிவு ஆட்டத்தில் கானாவை சந்திக்கிறது.
முதல் போட்டியில் அமெரி்க்காவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்றபோதும், வலுவான அமெரிக்காவுக்கே சவால் விட்டாங்க என்று பேச வைத்தது.
அடுத்து நடந்த, மற்றொரு வலுவான அணியான கொலம்பியா உடனான போட்டி, இந்தியா மீதான அவநம்பிக்கையை போக்கியது. உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்ததுடன், 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், கடும் சவால் விடுத்த இந்திய இளைஞர்கள் மீது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ பிரிவில் 2 வெற்றிகள் மூலம் அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. கொலம்பியா மற்றும் கானா அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இதுவரை ஒரு புள்ளிகள் கூட பெறாத நிலையில், இன்று கானாவை இந்தியா சந்திக்கிறது. கடந்த இரண்டு ஆட்டங்களில் தடுப்பாட்டத்தில் மிகச் சிறப்பாக இந்தியா செயல்பட்டது குறிப்பிட வேண்டிய முன்னேற்றம். மேலும் உலகக் கோப்பை போட்டி என்ற பயமில்லாமல், வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது, அவர்களுக்கு ஆட்டத்தில் கவனத்தை செலுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுவரை நடந்த ஆட்டங்களில் இந்திய அணியின் செயல்பாடு, சர்வதேச போட்டிகளில் விளையாடும் அனைத்து தகுதிகளும் தங்களுக்கு உண்டு என்பதை காட்டியுள்ளது.
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால், மூன்று அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல் வித்தியாசத்தில் மற்றவர்களைவிட முன்னிலையில் இருப்பதால், இந்தியா புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால், அடுத்த சுற்றில் விளையாடுவது நிச்சயம்.
தோல்வி அடைந்தாலும், அமெரிக்கா - கொலம்பியா இடையேயான போட்டியின் முடிவின் அடிப்படையில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் அதிர்ஷ்ட வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கலாம்.
ஒரு வாரத்தில் மக்களிடையேயும், மற்ற நாடுகள் இடையேயும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை நமது வீரர்கள் உருவாக்கியுள்ளனர். அதை இன்றைய போட்டியில் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.