பெங்களூரு: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முதல் முறையாக நடத்தும் மற்றும் பங்கேற்பு வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ள நிலையில், கால்பந்து ரசிகர்களுக்கு மற்றொரு இனிப்பான செய்தி. ஆசியக் கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள், 2019ல் யுஏஇயில் நடக்க உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் போட்டியில் வழக்கமாக 16 அணிகள் பங்கேற்கும். இந்தமுறை 24 அணிகள் பங்கேற்க உள்ளன.
இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏ பிரிவில் உள்ள இந்தியா, நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மகாவ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று தகுதி பெற்றுள்ளது.
ஜூனியர் கால்பந்து அணி, உலகக் கோப்பை போட்டியில் கலக்கி கொண்டிருக்கும்போது, சுனில் சேத்ரி தலைமையிலான சீனியர் அணி, தகுதிச் சுற்றில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று, ஆசியக் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.
ஆசியக் கோப்பை போட்டிக்கு இந்தியா நான்காவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன், 1964, 1984, 2011ல் விளையாடியுள்ளது.
பெங்களூருவில் மழை குறுக்கிட்ட நேற்று இரவு நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில், ரவுலிங் போர்ஜெல், சுனில் சேத்ரி, ஜேஜே லால்பகுல்லா ஆகியோர் கோல் அடித்தனர். மகாவ் அணி ஒரு சேம்சைடு கோல் போட்டதால், இந்தியா 4-1 என்ற கோல் கணக்கி்ல சுலபமாக வென்றது.
அடுத்ததாக நவம்பர் 24ல் மியான்மரையும், அடுத்த ஆண்டு மார்ச் 27ல் கிர்கிஸ்தான் அணியுடன் தகுதிச் சுற்றில் இந்தியா விளையாட உள்ளது.