பெங்களூரு: 2018 பிஃபா உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடருக்கான தகுதிப் போட்டியில் இந்தியா தொடர்ந்து 3வது முறையாக தோல்வியைத் தழுவியுள்ளது. ஈரானுடன் நடந்த மோதலில் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் படு தோல்வியைச் சந்தித்தது.
வலிமை வாய்ந்த ஈரானின் ஆட்டத்திற்கு முன்பு நம்மவர்களால் எடுபட முடியாமல் போய் விட்டது. சர்வதேச அளவிலான அனுபவம் நமது அணி வீரர்களுக்குக் குறைவு என்பதால் ஈரானின் உத்திகளைச் சமாளிக்க நமது வீரர்கள் திணறினர்.
அதேசமயம், ஈரான் வீரர்கள் தங்களது திறமையான ஆட்டத்தால் இந்தியர்களுக்கு ஆட்டம் காட்டினர். கூடவே எப்படி விளையாட வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுத்தனர்.
இருப்பினும் முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா சற்று திறமையாகவே ஆடியது என்பதைச் சொல்லியாக வேண்டும். ஈரானின் அரண்களை உடைத்து முன்னேற இந்தியர்கள் சிறப்பாகவே முயன்றனர். ஆனால் அனுபவம் அவர்கள் பக்கம் இல்லாமல் போனது துரதிர்ஷ்டவசமானதுதான்.
முதல் பாதியில் ஈரான் ஒரு கோல் போட்டது. 2வது பாதியில் மீதமுள்ள 2 கோல்களையும் போட்டது. பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இந்த டி பிரிவு போட்டி நடைபெற்றது.
இந்திய அணியின் அர்னாப் மண்டல், சந்தேஷ் ஜிங்கான் ஆகியோர் நடுக்களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஆசியக் கண்டத்தில் மிக வலிமையான அணிகளில் ஒன்றான ஈரான் வீரர்கள் அதைத் தகர்த்து மிக எளிதாக முன்னேறினர். 2வது பாதியில் 4 நிமிட இடைவெளியில் 2 கோல்களை ஈரான் போட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தரப்பில் 29வது நிமிடத்தில் சர்தார் அஸோன், 47வது நிமிடத்தில் அன்ட்ரனிக், 51வது நிமிடத்தில் மெஹதி தரோமி ஆகியோர் கோல் போட்டனர். இருப்பினும் ஈரான் அதிக கோல்கள் போட விடாமல் இந்திய தடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டது முக்கியமானது.
அடுத்து அக்டோபர் 8ம் தேதி துர்க்மேனிஸ்தான் அணியுடன் இந்தியா மோதவுள்ளது.