முதல் டெஸ்ட் டிரா
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு தலா ஐந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டி-20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுகிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், 2வது டெஸ்ட் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது.
வேகப்பந்துக்கு சாதகமான பிட்ச்
டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலஸ்டயர் குக், முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். புல் படர்ந்த லாட்ஸ் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது இங்கிலாந்து.
டோணியும் விருப்பம்
டாசில் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணியும் முதலில் பவுலிங்கையே தேர்வு செய்திருக்கும் என்று அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி தெரிவித்தார்.
மோதலுக்கு பிறகான மோதல்
முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன் மற்றும் இந்திய பேட்ஸ்மேன் ஜடேஜா ஆகியோர் நடுவேயான மோதல், ஐசிசியில் பரஸ்பரம் இரு அணிகளும் புகார் அளிக்கும் அளவுக்கு சென்றது. மோதலுக்கு நடுவே இரு அணிகளும் சந்திக்கும் போட்டி என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி
முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே, ரவீந்திரஜடேஜா, டோணி, ஸ்டூவர்ட் பின்னி, பிரவீன்குமார், இசாந்த் ஷர்மா, முகமது சமி ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்
இங்கிலாந்து அணி
அலஸ்டயர் குக், சாம் ராப்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோ ரூட், மொயீன் அலி, மேத் பிரையர் , ஸ்டோக்ஸ், பிராட், புளுன்கெட், ஆண்டர்சன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் உள்ளனர். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.