டெல்லி: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில், பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே வெளியேற, பட்டம் வென்று தருவதில், சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனாய் இடையே கடும் போட்டி உள்ளது. மூவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் சீனாவின் சென் யூபியிடம் 21-17, 23-21 என்ற செட்களில் பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.
கொரியா ஓபன் பட்டத்தை வென்ற சிந்து, ஜப்பான் ஓபனில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். தற்போது டென்மார்க் ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
கிளாஸ்கோ உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்ற சாய்னா நெஹ்வால், முதல் சுற்றில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் கரோலினா மரினை 22-20, 21-18 என்ற நேர் செட்களில் வென்றார். நேற்று நடந்த ஆட்டத்தில் தாய்லாந்தின் நிட்சான் ஜின்டபோலை 22-20, 21-13 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
எச்.எஸ். பிரனாய், ஒலிம்பிக்கில் மூன்று முறை வெள்ளி வென்ற மலேசியாவின் லீ சாங் வீயை 21-17, 11-21, 21-19 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக வீயை பிரனாய் வென்றுள்ளார். காலிறுதியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சோன் வான் ஹூவை சந்திக்கிறார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-13, 8-21, 21-18 என்ற செட்களில் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜின்னை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள விக்டோர் ஆக்சல்சானை சந்திக்கிறார்.