டோணி ஆதிக்கம் போச்சு
இந்நிலையில் இயான் சேப்பல் நிருபர்களிடம் கூறுகையில் " கேப்டனாக திறம்பட செயல்பட்ட டோணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதிகிறேன். எனவே விராட் கோஹ்லியிடம் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை கைமாற்றிவிட இதுதான் தக்க நேரமாக இருக்க முடியும். குறுகிய கால போட்டிகளுக்கு வேண்டுமானால் டோணி பொருத்தமான கேப்டனாக இருப்பார், ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் சிறப்பான கேப்டனாக இருக்க முடியாது என்று கருதுகிறேன்.
இந்திய கிரிக்கெட் வாரியம் சரியில்லை
கோஹ்லிக்கு கேப்டன் பதவியை அளிப்பதில் எந்த தடையும் இருப்பதாக நினைக்கவில்லை. புதிய வகையில் யோசிக்கும் மூளை இப்போது இந்தியாவுக்கு தேவை. ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வாளர்கள் மிகவும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பவர்கள். ஆஸ்திரேலிய தேர்வு வாரியத்தினர் போல இரக்கமற்று அதிரடியாக வீரர்களை நீக்குவதில்லை. கேப்டனை மாற்ற வேண்டும் என்றால்கூட அவர் ஓய்வு பெறும் வரை காத்திருப்பதுதான் இந்திய தேர்வு வாரியத்தின் வழக்கம்.
ஆஸ்திரேலியாவாக இருந்தால்..
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்தகால டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து தோற்றது. இதுவே ஆஸ்திரேலிய அணி இப்படி தோற்றிருந்தால் எப்போதோ கேப்டன் மாற்றப்பட்டிருப்பார். ஆனால் இங்கிலாந்துடன் அடுத்த டெஸ்ட் தொடர் தொடங்கிய நிலையிலும் இந்தியாவின் பழைய கேப்டன் அதே பதவியில் இருக்கிறார்.
இளம் வயது
கோஹ்லிக்கு இப்போது 27 வயதாகிறது. கேப்டனாக பொறுப்பு வகிக்க இதுதான் தக்க தருணம். கோஹ்லி மிகவும் வலிமையான மனோதிடம் மிக்கவர். மிகவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர். எனவே அவரை கேப்டனாக்கினால் அவரது, மட்டைவீச்சு திறமை பாதிக்கப்படும் என்று நான் நம்பவில்லை.
பின்னி தேவையா?
இந்திய தேர்வாளர்களின் தேர்வு மோசமாக உள்ளது. சுழல் பந்து வீச்சாளரான அஸ்வினை அணியில் சேர்க்காமல், ஸ்டூவர்ட் பின்னிக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். ஸ்டூவர்ட் பின்னியை பந்து வீச்சாளராக கணக்கில் எடுக்க முடியாது. 8வது வரிசையில் விளையாடும் ஒரு பேட்ஸ்மேன் அவ்வளவே. பின்னி, ஜடேஜாவைவிட அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளராகும். தேர்வு சரியாக இருந்தால்தான் போட்டித்தொடரை வெல்ல முடியும் என்பதை இந்திய தேர்வு குழு நினைவில் வைக்க வேண்டும்.
ரோகித்தை கூப்பிடுங்க..
அடுத்த டெஸ்ட் போட்டி லாட்சில் நடக்கிறது. இது ஸ்பின்னுக்கு எடுபடாத பிட்ச். எனவே பின்னியையும், ஜடேஜாவையும் நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ரோகித் ஷர்மாவையும், அஸ்வினையும் களமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.