தானாக கற்றுக் கொண்டார்
களரி பயிற்சியை மீனாட்சி அம்மாள் தனது 6-ஆவது வயதில் தானாக கற்றுக் கொண்டார். ஒரு முறை களரி சண்டை பயிற்சி நிலையத்துக்கு மீனாட்சியையும், அவரது சகோதரியையும் அவர்களது தந்தை அழைத்து சென்றார். அங்கு குறைந்த எண்ணிக்கையிலான சிறுமிகளே களரி பயின்று வந்தனர். நாளடைவில் பருவவயதை எட்டியவர்கள் அப்பயிற்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டனர். ஆனால் மீனாட்சியின் மதி நுட்பம் மற்றும் ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை அவர் களரியை தொடர்ந்து பயில அனுமதித்தார்.
திருமணம்
களரி பயிற்சி மையம் வைத்திருந்த ராகவன் என்பவரையே மீனாட்சி திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அந்த பயிற்சி மையத்தில் பயில்வோருக்கு மீனாட்சி அம்மாளும் பயிற்சி அளித்தார். ராகவனின் லட்சியமே களரி பயிற்சியும் அதன் முக்கியத்துவமும் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான். மீனாட்சி- ராகவன் தம்பதிக்கு இரு மகன்களும், இரு மகள்களும் 6 வயதில் இருந்தே களரி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் மறைவு
ராகவன் காலமானதைத் தொடர்ந்து களரி பயிற்சி மையத்தை நடத்தும் பொறுப்பு மீனாட்சிக்கு வந்தது. தற்போது கேரள மாநில கள்ளிக்கோட்டையில் உள்ள கடாதநாதன் களரி சங்கம் என்ற பயிற்சி மையத்தை கணவரின் விருப்பத்துக்கு ஏற்ப மிகப் பெரிய அளவில் கொண்டு சென்றுவிட்டார். இவரிடம் ஏராளமானவர்கள் களரி பயின்று வருகின்றனர். அவர்களிடம் இருந்து இத்தனை தொகைதான் கட்டணமாக வேண்டும் என்று மீனாட்சி யாரையும் வற்புறுத்த மாட்டாராம். குரு தட்சிணையாக யார் எவ்வளவு கொடுத்தாலும் அதை வாங்கிக் கொள்வாராம். இவரது ஒரு மகனும் களரி பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
இன்னும் அப்படியே இருக்கும் ஆற்றல்
மீனாட்சியிடம் களரி பயிற்சிக்கு வருபவர்கள் அவரது துள்ளி குதித்து சண்டை செய்யும் காட்சியையும், பறந்து பறந்து அடிப்பது என்பார்களே அது போல் பறப்பதையும் பார்த்து வியந்துள்ளனர். அவரது ஆற்றல் 7 வயது சிறுமியை போன்று உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த பயிற்சியானது யாரையும் துன்புறுத்த அல்ல என்று இது வெறும் விளையாட்டு என்றும் நமது பலத்தை வளர்க்கவும், தற்காத்துக் கொள்ளவும் இந்த கலை உதவுவதாக மீனாட்சி அம்மாள் தெரிவிக்கிறார்.
பத்மஸ்ரீ விருது
இவரது சேவையை பார்த்து இவருக்கு கடந்த குடியரசு தினத்தின்போது பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த விருதானது களரி பயிற்சிக்கு அளித்த அங்கீகாரமாக கருதுவதாகவும், தனது உடல் ஒத்துழைக்கும் வரை இந்த விளையாட்டை பயிற்றுவிக்க போவதாகவும் மீனாட்சி தெரிவித்தார். மிகவும் வயதான பெண்களில் களரி பயிற்சி மேற்கொள்ளும் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். காசு பார்க்கும் எண்ணத்தில் கலையை பயிற்றுவிக்காமல் கலையை அனைவரிடமும் சேர்க்கும் நோக்கத்தில் கற்றுக் கொடுக்கும் இவர் சுதந்திர இந்தியாவின் நாயகி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.