ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி
துபாய்: இந்த ஆண்டுக்கான, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
ஐசிசியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆண்டுதோறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளுக்கான அணி கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி.
ஒருநாள் அணியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமி, விராட் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.
ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்: பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், தென் ஆப்பிரிக்காவின் டிகோக், ஏபி டி வில்லியர்ஸ், டெய்ல் ஸ்டெயின், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி, ஜேம்ஸ் பால்க்னர், மேற்கிந்திய தீவுகளின் ட்வெயின் பிராவோ, இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். அணிக்கான விக்கெட் கீப்பராகவும் டோணியே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே நேரம் சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவர் பெயரும் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மிக்கேல் ஜான்சன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், இலங்கையின் குமார் சங்ககாரா, ரங்கனா ஹீரத், தென் ஆப்பிரிக்காவின், ஏபி டி வில்லியர்ஸ், டெய்ல் ஸ்டெயின், இங்கிலாந்தின் ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் கேப்டனாக இலங்கையின் மேத்யூஸ் தேர்வாகியுள்ளார்.
சிறந்த கேப்டனாக டோணி இதோடு ஐந்து முறை தேர்வாகியுள்ளார். மேலும், ஒருநாள் அணியில் தொடர்ந்து 7 வருடங்களாக இடம் பெறும் ஒரே இந்திய வீரரும் டோணிதான்.