வெற்றியை கோட்டைவிட்ட சென்னையின் எப்சி
சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில், வெற்றியை நெருங்கிய நிலையில், கடைசி நேரத்தில் டெல்லி டைமனோஸ் அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கொடுத்ததால், வெற்றியை கோட்டை விட்டது சென்னையின் எப்சி.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில், சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
அதற்கடுத்த ஆட்டங்களில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி, புனே சிட்டி, கோல்கத்தாவின் ஏடிகே அணிகளை வென்றது. மும்பை சிட்டி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த சென்னையின் எப்சி, பெங்களூரு எப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கி்ல் வென்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது. அடுத்ததாக ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி வென்றது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் டெல்லி டைனமோ அணியை சந்தித்தது கேப்டன் கூல் டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்சி.
இதில், 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் கோலடிக்கும் வாய்ப்பை டெல்லி டெனமோஸ் அணிக்கு கொடுத்தது. அதனால் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டியில் வென்றிருந்தால், மேலும் 2 புள்ளிகள் கிடைத்திருக்கும். சென்னையில் கடைசியாக கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இதேபோல் கடைசி நேரத்தில் தடுப்பாட்டத்தில் சொதப்பியதால் டிராவானது.
இந்தப் போட்டியில் டிரா செய்ததால், தொடர்ந்து, 6 போட்டிகளில் தோல்வி என்ற நிலையில் இருந்த டெல்லி டைனமோஸ் அணிக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.
சென்னையின் எப்சியின் ஜிஜே லால்பேக்குலா 2 கோல்களையும் அடித்து, தனது 27வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்சி 1 -0 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வென்றது. இதன் மூலம், 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னையின் எப்சி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வரும் 13ம் தேதி புனே சிட்டியை சந்திக்கிறது சென்னையின் எப்சி