லக்னோ: புரோ கபடி லீக் சீசன் 5ல் இதுவரை ஒரு ஆட்டத்தில் தோல்வியடையாத நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு, தோல்வியை பரிசாக அளித்தது புனேரி பல்தான் அணி.
புரோ கபடி லீக் சீசன் 5ல், 12 அணிகள், இரண்டு மண்டலங்களாக விளையாடி வருகின்றன. இதில், மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடந்து வருகின்றன. ஏ மண்டலத்தில் உள்ள புனேரி பல்தான் அணியும், தொடர்ந்து இரண்டு முறை சாம்பியனான நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியும் நேற்று இரவு நடந்த ஆட்டத்தி்ல மோதின.
இந்தத் தொடரில், இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்தித்ததில்லை, இதுவரை இரு அணிகளும் நேரடியாக மோதியுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி எனற பெரும் பலத்துடன் பாட்னா பைரேட்ஸ் அணி களமிறங்கியது.
இந்த ஆட்டத்தில், பாட்னாவின் கேப்டன் பிரதாப் நர்வால், மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 19 புள்ளிகள் எடுத்தார். ஆனால், அணியின் மற்ற வீரர்கள் சொதப்பினர் ராஜேஷ் மோன்டால், 10 புள்ளிகள், கேப்டன் தீபக் ஹூடா, 9 புள்ளிகள் எடுத்து, புனேரி பல்தான் அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர்.
நேற்றைய ஆட்டத்தில், துவக்கம் முதலே, புனேரி பல்தான் அணி, புள்ளிகளை குவித்து, தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. இது, அந்த அணிக்கு வெற்றியை உறுதி செய்தது.
ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் 3-2, 5வது நிமிடத்தில் 6-2 என துவங்கிய புனேரி பல்தான் அணி, பின்னர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணித்தது. 14வது நிமிடத்தில் 22-8 என முன்னிலை பெற்றது. புனேரி பல்தான் அணியின் வேகத்துக்கு, பாட்னா பைரேட்ஸ் அணியின் தடுப்பாட்டம் ஈடு கொடுக்க முடியவில்லை.
அணியை மீட்டெடுக்க பிரதீப் நர்வால் முயன்றாலும், அதற்கு, புனேரி பல்தான் அணி, பிரேக் பிடிக்காத வண்டி போல, வேகமாக முன்னேறி கொண்டே இருந்தது. முதல் பாதியின் இறுதியில், 25-13 என, புனேரி பல்தானின் ஸ்கோரி, விலைவாசி போல உயரப் பறந்தது.
இரண்டாவது பாதியிலும் புனேரி பல்தானின் அதிரடி தொடர்ந்தது. 21வது நிமிடத்தில், 28-15, 22வது நிமிடத்தில் 30-20, 27 நிமிடத்தில் 34-22, 30வது நிமிடத்தில், 36-24 என, நிமிடத்துக்கு நிமிடம், பாட்னா பைரேட்ஸ் அணியின் பி.பி.யை ஏற்றிக் கொண்டே சென்றது புனேரி பல்தான். கடைசி நிமிடங்களில், நடப்பு சாம்பியன் முன்னேறினாலும், இறுதியில், 47-42 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அபார வெற்றியைப் பெற்றது.