நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் வென்றது…. ஆனால் வெளியேறியது
சென்னை: பிரீமியர் பாட்மின்டன் லீக் போட்டியின் மூன்றாவது சீசனில் நடந்த ஆட்டத்தில் மிகவும் வலுவான பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை 3-2 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வென்றது. ஆனால் அதை இறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது.
பிரீிமியர் பாட்மின்டன் லீக் மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் எட்டு அணிகள், பங்கேற்கும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி முதல் டையில் அவதே வாரியர்ஸ் அணியிடம் 4-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
மும்பை ராக்கெட்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் வென்றது. டெல்லி டேஷர்ஸ் அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வென்றது.
வாழ்வா சாவா என்ற நிலையில், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் பி.வி. சிந்து 2-0 என்ற கணக்கில் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமீத் ரெட்டி, லீ யாங் ஜோடியும் அபார வெற்றியைப் பெற்றது.
ஆடவர் ஒற்றையரில் உலகின் நம்பர் வீரரான பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு விளையாடும் விக்டர் அலெக்சினிடம், சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்காக விளையாடும் தாய்லாந்து வீரர் தனான்சாக் சயேன்சாம்பூன்சுக் கடும் சவால் கொடுத்து 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையரில் சிந்து, கிறிஸ் ஆட்காக் ஜோடி தோல்வியடைந்தாலும், 3-2 என்ற கணக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி இந்தப் போட்டியில் வென்றது.
ஆனாலும், அரை இறுதிக்கு நுழையும் வாய்ப்பை சென்னை ஸ்மாஷர்ஸ் அணி இழந்தது. 12 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளதால், நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ், அரை இறுதிக்கு நுழைவதற்கு வாய்ப்பு இல்லை.
பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து நடக்க உள்ள மூன்று டைகளைப் பொறுத்தே, அரை இறுதிக்குள் நுழையும் அணிகள் எவை என்பது தெரியவரும்.