கவுகாத்தி: இந்தியாவில் நடைபெற்று வந்த 12-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலகலமான கலை நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றது. 12 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 308 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவின் கவுகாத்தி மற்றும் சில்லாங்கில் கடந்த 5ந் தேதி தொடங்கி 12 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழா கவுகாத்தில் உள்ள இந்திராகாந்தி தடகள மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
நிறைவு விழாவில் வடகிழக்கு மாநிலங்களின் வலிமையை காட்டும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே இரவைப் பகலாக்கும் லேசர் விளக்குகள், வாணவேடிக்கைகள் கண்களுக்கு விருந்தளித்தன. போட்டியில் பங்கேற்ற நாடுகளின் விளையாட்டுக் குழுவினர் மைதானத்தில் அணிவகுத்து வந்து நிறைவு விழாவை சிறப்பித்தனர்.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா ஸ்நோவால் போட்டிகளை முறைப்படி நிறைவு செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோய், மேகாலாய மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சர் ஷெனித் எம். சங்மா, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் 8 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து தெற்கு ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் கொடி இறக்கப்பட்டது. அந்த கொடியை அமைச்சர் ஸ்நோவால், தெற்கு ஆசிய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்.ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.அவர் அடுத்து போட்டிகளை நடத்தும் நேபாள நாட்டின் ஒலிம்பிக் சங்க நிர்வாகியிடம் ஒப்படைத்தார்.
12 நாள்கள் நடைபெற்ற தெற்கு ஆசிய போட்டிகளில் இந்தியா மொத்தம் 308 பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது, இந்திய வீரர், வீராங்கனைகள் 188 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கல 308 பதக்கங்களை கைப்பற்றினர்.
தெற்காசிய போட்டிகள் 2010ம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்றது. 2012ம் ஆண்டு டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்ட இந்த போட்டி சட்டமன்ற தேர்தல் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க இடைநீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை தள்ளிப்போனது.
இதுவரை நடைபெற்ற 12 தெற்காசிய விளையாட்டு போட்டிகளிலும் இந்தியாவே ஒட்டுமொத்த சாம்பியன் பட்ட்த்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.