ஹைதராபாத்: புரோ கபடி லீக் போட்டிகளின் 5வது சீசன் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு வரை 8 அணிகள் பங்கேற்று வந்த புரோ கபடி லீக் போட்டிகளில் இந்த முறை தமிழகம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து புதிதாக 4 அணிகள் களமிறங்கியுள்ளன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடக்கின்றன.
தொடக்க நாளான இன்று, முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி-தெலுங்கு டைட்டன்ஸ் மோதின. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், குருசாய் தத், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தெலுங்கு நடிகர்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அக்ஷய் குமார் தேசிய கீதம் பாட விழா இனிதே தொடங்கியது.
பரபரப்பாக நடந்த தொடக்க ஆட்டத்தில் 32- 27 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.