தமிழர் வாழும் நாடுகளில் மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- நந்திக் கடலில் மலர்தூவி அஞ்சலி
யாழ்ப்பாணம்: உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (மே18) நிகழ்வுகள் நேற்று முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு நந்திக் கடலில் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழீழ தனிநாடு கோரி இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழருக்கு தனிநாடு என்ற கொள்கையில் அடிப்படையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் போராட்டத்தை சர்வதேச நாடுகள் பயங்கரவாத செயலாக கருதின.
இதனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் யுத்தத்துக்கு அத்தனை உலக நாடுகளும் உதவின. இதன்விளைவாக 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது 2 லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நூற்றாண்டின் மிக கோரமான இனப்படுகொலையாகும்.
ஆம்பன் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கிமீ தொலைவில் மையம்.. உயர் தீவிர புயலாகிறது!
முள்ளிவாய்க்கால், நினைவேந்தல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், தளபதிகள் உள்ளிட்டோரும் யுத்தத்தில் உயிரிழந்தனர். இந்த இறுதி யுத்தமான முள்ளிவாய்க்கால், நந்தி கடலில் முடிவடைந்தது. இதனால் தமிழர் வரலாற்றில் முள்ளிவாய்க்காலும் நந்திக் கடலும் ஒரு பெருந்துயரத்தின் அடையாளமாக இடம்பெற்றிருக்கிறது. ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
யாழ். பல்கலையில்..
இலங்கையில் ஈழத் தமிழர் பகுதிகளில் கடந்த வாரம் முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்கிவிட்டன. இலங்கையிலும் கொரோனா பாதிப்பு இருப்பதால் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடையை மீறி பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் போலீசாரின் தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நந்தி கடலில் மலர்தூவி அஞ்சலி
நந்தி கடலில் இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக ரவிகரன் கூறுகையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதி காட்சிகளின் மெளனமான சாட்சியே இந்த நந்திக்கடல்தான். எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்த கடல் அன்னையை வணங்கி உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தமிழ்நாட்டிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. கொரோனா லாக்டவுனால் வீடுகளில் இருந்தபடியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைபிடிக்க மே 17 இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதேபோல் மதிமுக, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் தி.க. உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடைபிடித்தன. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.