ஈரோடு: சிலிண்டர் வெடித்து தாய், மகள்கள் பலி - கொலையா? தற்கொலையா
ஈரோடு அருகே சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலிருந்த தாய், மகள்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: சித்தோடு அருகே தயிர்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் வீட்டிலிருந்த தாய் ஜெயமணி,45, மகள்கள் தனுஷ்யா,18, பவித்ரா,13 ஆகிய 3 பேர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து மூவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இப்போது சிலிண்டர் வெடிப்பு சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. படுக்கையறையில் கேஸ் சிலிண்டர் இருக்கும் நிலையில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டன.
ஜெயமணியின் கணவர் ராஜா வயலுக்கு சென்றிருந்த நேரத்தில் மகள்களுடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக மூவரின் உடல்களும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.