ரத்த பூமி என்றாலும் அச்சமில்லை.. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 556 பெண்கள் போட்டி!
கொழும்பு: யுத்த வடு பாய்ந்த ரத்த பூமியான இலங்கையின், நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 556 பெண்கள் களத்திலுள்ளனர்.
இலங்கையில் இன்று நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 225 இடங்களில், 196 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று நேரடியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எஞ்சிய இடங்கள் நியமன உறுப்பினர்களுக்கானது. கட்சிகளின் வாக்குவிகிதாச்சாரப்படி அந்த நியமனம் நடைபெறும்.
இத்தேர்தலில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி சார்பில்தான் முன்னாள் அதிபர், ராஜபக்சே போட்டியிடுகிறார்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, 64. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 3653 ஆகும்.
சுயேச்சைக் குழுக்களிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, 2498.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை, 6151. இதில் அதிகபட்சமாக கொழும்பில் 792 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பொலநறுவையில் 88 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இலங்கை முழுவதும் மொத்தம் 556 பெண்கள் போட்டியிடுகின்றனர்.