புலிகளுக்கு எதிரான யுத்தம்: இலங்கைக்கு 80% பயிற்சி அளித்தது இந்தியாவே.. சொல்வது கோத்தபாய
புலிகளுக்கு எதிரான யுத்தம்: இலங்கைக்கு 80% பயிற்சி அளித்தது இந்தியாவே.. சொல்வது கோத்தபாய
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சி கொடுத்தது இந்தியாதான் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் ஆங்கில ஏட்டுக்கு கோத்தபாய ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
புலிகளுக்கு எதிரான போரில் சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கின. அப்போது இந்தியாவோ இலங்கை ராணுவத்தினருக்கு மிக முக்கியமான பயிற்சிகளை வழங்கியது.
பல ஆண்டுகளாக இந்தியாதான் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சிகளை வழங்கியது. தமிழகத்தின் நெருக்கடியால் இந்தியாவில் இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்க முடியவில்லை.
இருப்பினும் எங்களது ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல உதவிகளை செய்தது இந்தியா. சீனாவின் ஆயுதங்களைத்தான் நாங்கள் பிரதானமாக பயன்படுத்தினோம். சீனாவையே நாங்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தோம்.
இவ்வாறு கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.