லஷ்கர் இ தொய்பாவின் புதிய தளமாக உருவெடுக்கும் இலங்கை!
கொழும்பு: தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் புதிய தளமாக இலங்கை உருவெடுத்து வருகிறது என்று தி சண்டே கார்டியன் ஏடு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து கடல்வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தி சண்டே கார்டியன் ஏடு, நேபாளத்தைப் போல இலங்கையை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் தமது புதிய தளமாக மாற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளது.
நவாஸ் சகோதரர் ஆதரவுடன்...
அந்த ஏட்டின் கட்டுரையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப்பின் ஆதரவுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் புதிய தளமாக இலங்கை வேகமாக மாறிவருகிறது. இத்தகவலை சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சியைக் கண்காணித்து வரும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு இலங்கையில்..
இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா முகாம் அமைத்திருக்கிறது.
சுற்றுலா போர்வையில் வரும் பாக். ராணுவத்தினர்..
பாகிஸ்தான் நாட்டின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்த இடங்களுக்கு சுற்றுலா என்ற போர்வையில் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
பாக். ராணுவ உதவி
இலங்கையிலும் ஒரு பாதுகாப்பு பிரதேசத்தை உருவாக்கும் லஷ்கர் இ தொய்வின் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் உதவி வருகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியா, ஐரோப்பா இலக்கு
இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் தாக்குதலைகளை நடத்துவதற்கான ஒன்று கூடும் இடமாக இலங்கையை லஷ்கர் இ தொய்பா மாற்றியுள்ளது.
அன்று நேபாளம், இன்று இலங்கை
கந்தகார் விமானக் கடத்தலின் போதுதான் நேபாளத்தை தீவிரவாதிகள் எப்படி தளமாக பயன்படுத்துகின்றனர் என்பதே இந்தியாவுக்கு தெரியவந்தது. அண்மைக்காலமாக நேபாளத்தில் தீவிரவாதிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவதால் அவர்கள் இலங்கையை புகலிடமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.