இந்தியாவின் 50 ஆயிரம் வீடு திட்டம்: இலங்கை அமைச்சர்கள் தொண்டமான் - டக்ளஸ் கடும் வாக்குவாதம்!
கொழும்பு: இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் தொடர்பாக இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமானுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் குறித்து ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது, இத்திட்டத்தை வடக்கில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்து செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.
ஆனால் 50 ஆயிரம் வீடுகளும் இந்திய வம்சாவளியினரான மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கே உரியது என்று அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் வாதிட்டார். இது தொடர்பாக இருவரும் காரசரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ராஜபக்சே, மலையகத்தில்தான் இந்த வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி அடைந்தார்.