வந்தது அழைப்பு... ஆயத்தமாகும் கிறிஸ்தவர்கள்... கச்சத்தீவில் களைகட்டும் அந்தோணியர் திருவிழா
கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்: பிப்ரவரி 23,24ம் தேதிகளில் கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழாவில் கலந்துக்கொள்ள இந்தியா, இலங்கை நாட்டு பக்தர்களுக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அழைப்பு விடுத்துள்ளார்.
ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாட்டு மீனவர்கள் இதில் கலந்து கொள்ள வருமாறு அந்தோணியர் கோயில் யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் 1983-ம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப் பட்டது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.