உயிருக்கு பயம்.. அதிரடி படை உடை அணிந்து தப்பித்த இலங்கை அமைச்சர் ரணதுங்கா.. திடுக் தகவல்!
இலங்கை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா நேற்று தனக்கு எதிராக போராடியவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார் என்பது குறித்த பரபரப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது.
கொழும்பு: இலங்கை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா நேற்று தனக்கு எதிராக போராடியவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார் என்பது குறித்த பரபரப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது.
நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அர்ஜுனா ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார்.
அவர் கொழும்பின் டிமாடகோடாவில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆவணங்களை எடுக்க அவரது பாதுகாவலர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் அமைச்சருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
[ரணில் பாதுகாப்பாளர்கள் 1008லிருந்து 10 ஆக குறைப்பு.. பிரதமர் அலுவலகத்தில் கரண்ட், தண்ணீரும் கட்!]
துப்பாக்கியால் சுட்டனர்
அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்களை ஆவணங்களை எடுக்க விடாமல் அங்கிருந்த பணியாளர்கள் தடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலானது. இதனால் அமைச்சரின் பாதுகாவலர்கள் திடீரென பணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கு நின்ற பணியாளர்கள் மீது சரமாரியாக சுட்டனர்.
பெரிய கலவரம்
இதனால் இரண்டு பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார். இது அங்கு பெரிய கலவரத்தை உருவாக்கியது. பணியாளர்கள் எல்லோரும் அர்ஜுனா ரணதுங்காவை சுற்றிக்கொண்டு தாக்க முயன்றனர். அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவை அங்கிருந்த பணியாளர்கள் பிடித்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதிரடி படை
ரணதுங்காவிற்கு எதிராக போராடிய பணியாளர்கள் அங்கு நிறைய பேர் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரணதுங்கா எப்படி தப்பித்தார் என்பது குறித்த பரபரப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது. அங்கு 20க்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள் உள்ளே புகுந்து ரணதுங்காவிற்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கிறார்கள். இதனால்தான் அவர் பாதுகாப்பாக வெளியேறி இருக்கிறார்.
அட இப்படியா
அமைச்சர் ரணதுங்காவை வெளியே கொண்டு வர அவருக்கு அதிரடி படையினரின் உடை அளிக்கப்பட்டுள்ளது. அதை அணிந்து கொண்டு, அவர்களின் ஹெல்மெட்டையும் அணிந்து கொண்டு வீரர்கள் போலவே கூட்டத்தோடு கூட்டமாக தப்பித்து இருக்கிறார் ரணதுங்கா. வேஷம் போட்டதால்தான் தப்பித்தார், இல்லையென்றால் அவர் வெளியே வந்திருக்கவே முடியாது என்கிறார்கள்.
எல்லோரும் கிண்டல்
இதை இலங்கையில் இருக்கும் மக்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். ஒரு அமைச்சருக்கு போய் இந்த நிலைமையா என்று கேட்டுள்ளனர். முக்கியமாக ஒரு பெட்ரோலிய துறை அமைச்சர், பெட்ரோலிய துறை ஊழியர்களை பார்த்தே இப்படி பயப்படுவதா என்று கேட்டுள்ளனர்.
படம் நன்றி: டெய்லி மிர்ரர்.