பசில் ராஜபக்சேவுக்கு மே 7 வரை காவல் நீட்டிப்பு...!
கொழும்பு: ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்சேவின் காவலை மே 7-ம் தேதி வரை நீட்டித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பி, பசில் ராஜபக்சே. முந்தைய அரசில் அதிபரின் மூத்த ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சராகவும் பதவி வகித்தார், மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த இவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தனது கைதுக்கு அஞ்சி மனைவியுடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில், பசில் தனது பதவி காலத்தில், வாழ்வாதார மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரம் டாலர் அதாவத இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 29 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, சிறிசேன அரசால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டுக்கு ஓடியதால், இண்டர்போல் உதவியை இலங்கை அரசு நாடியது.
இதனிடையே நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, கடுவெல நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த மாதம் நாடு திரும்பிய அவரிடம் நிதி குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி காவலில் அடைத்தனர்.
நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து பசில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, பசிலின் காவலை மே 7-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அப்போது, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்ற பசிலின் வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வெலிக்கடை சிறை மருத்துவமனைக்கு பசிலை அனுப்ப உத்தரவிட்டார்.