டக்ளஸ் தேவானந்தாதான் என்னை சந்தித்தார்... ஈழத் தமிழருக்கு துரோகம் செய்யமாட்டேன்: பாரதிராஜா விளக்கம்
மட்டக்களப்பு: யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா தம்மை தேடி வந்து சந்தித்ததாகவும் ஈழத் தமிழருக்கு ஒருபோம் துரோகம் செய்யமாட்டேன் என்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா, டக்ளஸ் தேவானந்தாவுடன் கை குலுக்குவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. தமிழ்நாட்டில் தேடப்படுகிற குற்றவாளியான, தமிழீழத்துக்கு துரோகம் செய்தவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் எப்படி பாரதிராஜா கை குலுக்கலாம் என்ற கொந்தளிப்பும் சமூக வலைதளத்தில் வெடித்தது.
மேலும் பிரபாகரனை பயங்கரவாதி எனவும் பாரதிராஜா விமர்சித்தார் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக பாரதிராஜாவிடம் இயக்குநர் கவுதமன் விளக்கம் கேட்டு அதை தமது முகநூலில் வெளியிட்டிருந்தார்.
அதில், டக்ளஸ் தேவானந்தாதான் தம்மை தேடி வந்ததாக பாரதிராஜா கூறியதாகவும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் மட்டக்களப்பின் கிரான்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சம்பவம் குறித்து பாரதிராஜா கூறியதாவது:
'உலகில் வாழ்கின்ற தமிழரின் பூர்வீகம் ஒரே இடத்திலிருந்து ஆரம்பமாகின்றது. இந்தத் தமிழருக்கு துயர் வரும்போது, இந்த பாரதிராஜா குரல் கொடுப்பான். ஆனால், அது ஒரு அரசியல்வாதியாக இல்லை. இலங்கைத் தமிழரும் எமது தொப்புள் உறவு. அவர்களுக்கு நான் ஒருபோதும் தீங்கிழைக்கமாட்டேன்.
நான் அகிலன் பவுண்டேசன் நிறுவுனர், நண்பர் கோபாலகிருஸ்ணனின் அழைப்பின் பேரில் அறக்கட்டளை சார்பாக கலைஞர்களை சந்திப்பதற்கு இலங்கை வந்தேன். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைஞர்களை சந்தித்தேன். நான் அங்கு தங்கியிருந்தபோது, இந்தியத் தூதரகத்திலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் இலங்கை அமைச்சர் ஒருவர் என்னை சந்திக்க வரவுள்ளதாக கூறினர். அமைச்சர்களை நாமே போய் சந்திக்கவேண்டும். ஆனால், அமைச்சரே என்னை சந்திப்பதற்கு வருகிறார் என்று அப்போது நான் நினைத்தேன்.
இந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்து என்னை சந்தித்தார். மீனவர்களின் பிரச்சினை பற்றி பேசுவதற்கு முற்பட்டார். அப்போது அவரிடம் கலைஞர்களை சந்திப்பதற்காகவே நான் இங்கு வந்தேன். அரசியல் பேசுவதற்கு அல்ல எனக் கூறினேன். அப்போது அவருடன் சேர்த்து என்னை புகைப்படங்கள் எடுத்தனர்.
அந்தப் புகைப்படங்களை இணையத்தளங்களில் ஏற்றி பாரதிராஜா இந்த அமைச்சரை சந்தித்தார். இவர் அரசின் கைக்கூலியாக வந்திருக்கிறாரோ என்ற உலகம் முழுதும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இதை நான் இந்த இடத்தில் கூறாமல் போனால் நாகரிகம் இல்லாதவனாகிவிடுவேன்.
அறக்கட்டளை சார்பாக இங்குள்ள கலைஞர்களை சந்திப்பதற்கும் அவர்களை கௌரவிப்பதற்கும் நான் வந்தேன். அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்ததை உலகம் முழுதும் பரப்பி, உலகத் தமிழர் மத்தியில் என் மீது அவப்பெயரை உண்டாக்க சிலர் நினைக்கின்றனர்.
இந்த உண்மைக்குப் புறம்பான விடயத்தை பத்திரிகையாளர்களை அழைத்துக் கூறவேண்டும் என்று நினைத்தேன். என்னை எவரும் கைக்கூலி என்று கூறமுடியாது.
முப்பது, நாற்பது ஆண்டுகளாக மூன்று, நான்கு முதலமைச்சர்களை பார்த்துவிட்டேன். தமிழ்நாட்டில் நான் அரசியலில் இறங்கியிருந்தால் மிகப்பெரிய அதிகாரத்தில் இருந்திருப்பேன். ஆனால், நான் அதை விரும்பவில்லை. நல்ல கலைஞனாக வாழ்ந்து சாகவேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
இவ்வாறு பாரதிராஜா கூறினார்.
பாரதிராஜா தற்போது தமிழகம் திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.