சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் திருகோணமலை அருகே கடலில் மிதக்கின்றன?
திருகோணமலை: இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் ஏராளமான சடலங்கள் மிதப்பாகவும் இவை சென்னை பெருமழை பேய்வெள்ளத்தில் மூழ்கியவர்களின் சடலமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இன்று காலை கரை ஒதுங்கிய ஒரு சடலத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கால்டாக்சி ஓட்டுநரான பூமிதுரையின் அடையாள அட்டை இருந்தது இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
100ஆண்டுகாலம் காணாத பேய்மழை... பெருவெள்ளம் சென்னையை புரட்டிப் போட்டு மூழ்கடித்துவிட்டது. இந்த மழை வெள்ளத்துக்கு எத்தனை பேர்தான் பலியானார்கள் என்ற விவரத்தை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. வரலாறு காணாத இந்த துயரம் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கியிருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான திருகோணமலை கடற்பரப்பில் 6 சடலங்கள் மிதக்கின்றன என இலங்கை கடற்படையினருக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு தேடுதல் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் திருகோணமலை அருகே நிலாவெளி பகுதியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.
அதில் இருந்த அடையாள அட்டையைப் பார்த்த மீனவர்களுக்கு கடும் அதிர்ச்சி. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கால் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தால் அந்த அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. அது சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பூமிதுரை என்பவரது அடையாள அட்டை.
@dinakaran_web
https://t.co/OrS7kdfbEp
https://t.co/HlSnTjL5B1
plz help to reach this out to the family
#ChennaiFloods #ChennaiRainsHelp
— Ksvk Thanukanth (@ksvkthanu) December 7, 2015
சென்னை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவராக பூமிதுரை இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது; இதேபோல்தான் அப்பகுதியில் ஒதுங்கிய உடல்களும் சென்னை வெள்ளம் காவு கொண்டோருடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இத்தகவல் ஈழத் தமிழர்களை மட்டுமின்றி சென்னைவாசிகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.