இங்கிலாந்து பிரதமர் கேமரூன் திடீர் யாழ்ப்பாணம் பயணம்... தமிழர்களுடன் சந்திப்பு
கொழும்பு: இலங்கையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.. ஏன் உலக நாடுகளும் கூட எதிர்பார்த்திருக்க முடியாது.. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், திடீரென இன்று யாழ்ப்பாணத்திற்குப் போய் இறங்கியுள்ளார்.
1948ம் ஆண்டு இங்கிலாந்து அரசிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்குப் போன முதல் வெளிநாட்டுத் தலைவர் டேவிட் கேமரூன்தான் என்பதால் இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணமாக பார்க்கப்படுகிறது.
இலங்கையின் கடந்த கால நிகழ்வுகள் குறித்து தீர்ப்பு எழுத யாரும் காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்தக் கூடாது என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூனுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சே பேசி சில மணி நேரங்களிலேயே கேமரூன் யாழ்ப்பாணம் போய் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிற்பகலில் பலாலி விமான தளத்தில்
இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து 20கிலோமீட்டர் தொலைவில் உள்ள பலாலி விமான தளத்தில் தரையிறங்கினார் கேமரூன். இலங்கை ராணுவ விமானத்தில் அவர் போயிருந்தார்.
தமிழர்களுடன் சந்திப்பு
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களையும் போரில் உயிர் தப்பிய தமிழர்களையும் கேமரூன் சந்திக்கவே யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார். அங்கு அவர் தமிழர் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
மாநாடு தொடங்கியதும் யாழ் பயணம்
காமன்வெல்த் மாநாடு இன்று முறைப்படி தொடங்கிய சில மணி நேரங்களில் கேமரூன் யாழ்ப்பாணத்திற்குப் பயணமானார்.
முதல் வெளிநாட்டுத் தலைவர்
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது. அதன் பின்னர் எந்த ஒரு வெளிநாட்டு பிரதமரோ, அதிபரோ யாழ்ப்பாணம் வந்ததில்லை. அந்தவகையில் கேமரூன் பயணம் சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நான்தான் முதல் தலைவர்
இதுகுறித்து டிவிட்டரில் கேமரூன் வெளியிட்ட செய்தியில், இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நான்தான். அங்குள்ள நிலவரம் குறித்த உண்மை நிலவரத்தை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளவே நான் யாழ்ப்பாணம் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
தமிழர்களின் தாயகம்
யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கிறார்கள். தமிழர்களின் தாயகம் இது. போரின்போது பெரும் பாதிப்பை சந்தித்ததும் யாழ்ப்பாணம்தான். சிங்களர்களின் வெறியாட்டத்திற்கு பலமுறை தன்னைப் பலி கொடுத்த பூமியும் இதுவே.
கொழும்பை விட வளமானது
ஈழத் தமிழர்களின் தாயகமான யாழ்ப்பாணம், பொருளாதாரத்தில் ஒரு காலத்தில் செழுமையாக இருந்ததாகும். கொழும்பைக் காட்டிலும் வளமையானதுமாகும்.
சிங்களர்கள் வெறியாட்டத்தில் அழிந்து போன யாழ்
ஆனால் விடுதலைப் புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தை சீரழித்து விட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். இன்று 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைபட்டுள்ளனர். விவசாயம் பறி போய் விட்டது.
கேமரூன் என்ன சொல்லப் போகிறார்?
தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசும் கேமரூன், தனது விஜயம் குறித்து தெரிவிக்கப் போகும் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்களர்கள் அதிருப்தி
இலங்கை அரசின் ஒப்புதலுடன்தான் கேமரூன் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அரசுக்கும், சிங்களர்களுக்கும் கேமரூனின் இந்தப் பயணம் கடும் அதிருப்தியை அளித்துள்ளதாகவே தெரிகிறது. தான் போக வேண்டும் கேமரூன் வலியுறுத்தியதை இலங்கை அரசு தட்டிக் கழிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் அவரது யாழ்ப்பாண பயணத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று தெரிகிறது.