புத்தாண்டிலிருந்து தீவிர அரசியலுக்கு வரும் சந்திரிகா குமாரதுங்க!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய நல்லொழுக்கம் நிறைந்த அரசியல் கலாசாரம் மற்றும் கொள்கைகளை மீண்டும் சமூகமயப்படுத்தும் நோக்கிலேயே தமது இந்த அரசியல் மறுபிரவேசம் இருக்கும் என தெரிவித்துள்ள சந்திரிகா, அதற்காக ஜனவரி மாதம் முதல் சிறப்பு அரசியல் செயல்திட்டம் ஒன்றை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து சுதந்திரக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவினால் கட்டியெழுப்பப்பட்டு, சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. சந்திரிகா பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தார்.
இப்படி பாதுகாக்கப்பட்டு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்சவினர் நாளுக்கு நாள் அழித்து வருகின்றனர். ஏதோ தங்கள் குடும்ப நிறுவனம் மாதிரி ஆக்கிக் கொண்டுள்ளனர்.
இதனால் சுதந்திரக் கட்சியின் அரசியல் கொள்கைகளை மீண்டும் சமூகமயப்படுத்த முன் வரவேண்டும் என இப்போதுள்ள அமைச்சர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
டிசம்பர் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் சிறப்புரையாளராக கலந்து கொள்ளும் சந்திரிகா, இதன் பின்னர் வெளிநாட்டில் இருந்து வரும் தனது பிள்ளைகளுடன் விடுமுறையை கழித்த பிறகு, ஜனவரி மாதம் முதல் அரசியலுக்கு வருவதாக தமது அணிக்கு உறுதியளித்துள்ளாராம்.