குழப்பவாதி மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்க கூடாது..தோற்கடியுங்கள்: சந்திரிகா ஆவேசம்
கொழும்பு: முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை இலங்கையின் பிரதமராக்கினால் பெரும் குழப்பம்தான் ஏற்படும்...அவரை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று மற்றொரு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆவேசமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளதாவது:
தேர்தலில் ஏதாவது ஒரு முறையில் மகிந்த ராஜபக்சே பிரதமரானால் ஒட்டுமொத்த இலங்கையில் பெரும் குழப்பம் ஏற்படும். கட்சிகளின் நலனை நாட்டை பற்றி சிந்தித்து மகிந்த ராஜபக்சவை தோல்வியடைய செய்யுமாறு நான் மக்களிடம் கேட்டு கொள்கின்றேன்.
அதிபர் தேர்தலில் தோற்றுப் போன மகிந்த ராஜபக்சே, பதவி பேராசையில் மீண்டும் அதிகாரத்தை கேட்டு கொண்டு வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகாலம் அதிகாரத்தில் இருந்து தனது குடும்ப உறுப்பினர்களுக்கு, உறவினர்களுக்கு பதவிகளை வழங்கி நாட்டை சீரழித்தார்.
நாட்டின் கட்டமைப்புகளுக்கு பெற்ற கடனில் பெரும்பகுதியை அபகரித்துக் கொண்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற கட்சியை என்னுடைய தாய், தந்தையர் பாடுபட்டு வளர்த்தனர்.
அந்த கட்சியை சுக்கு நூறாக நாசமாக்கிவிட்டார் மகிந்த ராஜபக்சே. இதை பார்க்க சகிக்காமல்தான் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்துள்ளேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் ராஜபக்சேவை மீண்டும் பிரதமராக்கிவிடவே கூடாது.
இவ்வாறு சந்திரிகா கூறியுள்ளார்.