இந்திய எதிர்ப்பை மீறி கொழும்பு துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் நிலை நிறுத்தம்
கொழும்பு: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சீனா இடம்பிடித்து இந்தியாவுக்கு எதிரான நிலையாக இலங்கையை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதால் இலங்கையை நட்பு நாடாக கருத கூடாது என்று தமிழ் தலைவர்கள் பலரும் முந்தைய மற்றும் இப்போதைய மத்திய அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் இலங்கையை நட்பு நாடாகவே இந்தியா பார்த்து வருகிறது.
சீனா ஆதிக்கம்
ஆனால் தமிழ் தலைவர்கள் கூறியதைப்போன்ற நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ள தொடங்கியுள்ளது. சீனாவின் போர்க்கப்பல் ஒன்றும், நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக்கொண்டபோதிலும், இலங்கை அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
இலங்கை மழுப்பல்
2010ம் ஆண்டில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்கு பல நாடுகளை சேர்ந்த 230 போர்க் கப்பல்கள் வந்துள்ளன. இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான நடவடிக்கையாகும். மாலுமிகள் ஓய்வெடுத்துக்கொள்ள இலங்கை வகை செய்து கொடுப்பது வழக்கம்" என்று அந்த நாட்டின் கடற்படை செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
இந்தியா கண்டிக்க வேண்டும்
ஆனால் இப்போதெல்லாம் சீனாவின் வருகை அதிகமாக நிகழ்வது இந்தியாவுக்கு தலைவலியை உருவாக்கியுள்ளது. இந்திய, இலங்கை ஆகிய இரு நாட்டு விவகாரங்களை கையாளும் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியா தனது கவலையை இலங்கையிடம் தெரிவித்துள்ளதே தவிர, கண்டிப்பாக கூறவில்லை என்றார். இலங்கையில் ஏர்போர்ட், ரோடுகள், ரயில் பாதைகள், துறைமுக சீரமைப்புக்கு சீனா அதிகம் உதவி செய்வதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
வழக்கத்துக்கு மாறாக ..
இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற கர்னல் ஆர்.ஹரிஹரன் கூறுகையில், "இந்திய பெருங்கடலில் கடத்தல்காரர்களை பிடிக்க உருவாக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலை படையில் சைன நீர்மூழ்கி கப்பல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது வழக்கமான நடைமுறை கிடையாது" என்றார்.
ஒப்பந்தத்துக்கு விரோதமானது
இலங்கையின் திரிகோணமலையில் விமான பராமரிப்பு வசதியை சீனா அமைத்துக்கொடுக்கிறது. இந்தியாவை இலக்காக தாக்க திரிகோணமலை சரியான இடமாகும். இதனால்தான் 1987ம் ஆண்டு இந்தியா-இலங்கை நடுவே போடப்பட்ட ஒப்பந்தத்தில், திரிகோணமலை உள்ளிட்ட இரு நாட்டின் முக்கிய பகுதிகளும், இரு நாடுகளின் பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.