பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது 3 நாள் காமன்வெல்த் மாநாடு
கொழும்பு: பலத்த சர்ச்சைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள், இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று தொடங்குகிறது.
இந்த மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் போகவி்ல்லை. அதற்காக வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதேசயம், தடபுடலாக கொழும்பு போய்ச் சேர்ந்துள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.
கனடா இந்த மாநாட்டை முழுமையாக புறக்கணித்து விட்டது. மொரீஷீயஸ் பிரதமர் தான் போகவில்லை என்று அறிவித்து விட்டார். இலங்கையில் மனித உரி்மை மீறல் அதிகமாக இருப்பதாக கூறி அவர் வரவில்லை. அதேசமயம், தனது நாட்டு வெளியுறவு அமைச்சரை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள்
இலங்கை மீது கடுமையான போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் சூழ்ந்துள்ளன. மனித உரிமை மீறல் புகார்கள் சுற்றி நிற்கின்றன. உச்சகட்டமாக இசைப்பிரியா கொடூரப் படுகொலை குறித்த வீடியோ காட்சி அதற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் எதைப் பற்றியும் ராஜபக்சே கும்பல் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
53 நாடுகளின் கூட்டமைப்பு
இப்படி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருக்கும் இலங்கையில்தான் 53 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த்தின் மாநாடு இன்று தொடங்குகிறது. 3 நாட்களுக்கு இது நடைபெறும்.
டேவிட் காமரூனுக்கு வாய்ப்பூட்டு
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன், தான் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினை குறித்துப் பேசப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால் அதைப் பேசக் கூடாது என்று காமரூனை இலங்கை எச்சரித்துள்ளது.
இந்தியாதான் பெரிய நாடு
காமன்வெல்த் நாடுகளியே மக்கள் தொகை அடிப்படையில் பெரிய நாடு இந்தியாதான். அதாவது மொத்த மக்கள் தொகையில் 69 சதவீதத்தைக் கொண்ட நாடு இந்தியா.