போப்பாண்டவரின் வருகைக்காக காத்திருக்கும்... வேதனை வடு நிறைந்த மடு அன்னை ஆலயம்..!
மடு, மன்னார்: வடக்கு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் மடு என்ற ஊரில் அமைந்துள்ள கன்னி மேரி தேவாலயம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இந்த தேவலாயத்திற்கு போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் வரவுள்ளார் என்பதால்.
மடு ஆலயம் சாதாரண வரலாறு கொண்டதல்ல. மிகப் பழமையான தேவாலயங்களில் மடு ஆலயமும் ஒன்று. கிட்டத்தட்ட 400 ஆண்டு பழமையானது இந்த தேவாலயம்.
இங்கு தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கள கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் வந்து இரு இனத்தவரும் ஒற்றுமையுடன், நல்லிணக்கத்துடன் வழிபட்டுச் செல்லும் பேராலயம் இது.
மடு அன்னை
மடு அன்னை என்று இந்த தேவலாயத்தில் அருள் பாலிக்கும் கன்னி மேரியை கிறிஸ்தவர்கள் வணங்கிச் செல்கிறார்கள். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் வருடாந்திர உற்சவம் மிகப் பிரபலமானது. லட்சக்கணக்கில் தமிழர்களும், சிங்களர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.
ஈழப் போரால் பாதிப்பு
ஆனால் ஈழத்தில் நடந்து வந்த போரால் இங்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து போனது. பல்லாயிரம் மக்கள் இடம் பெயர்ந்து சென்று விட்டதால் தேவாலயம் வெறிச்சோடியது.
சிங்கள ராணுவத்தின் வெறித் தாக்குதலில் சிக்கி
கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இந்த ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழர்கள் மீது இலங்கைப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். அதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
2008ம் ஆண்டில்
2008ம் ஆண்டு மீண்டும் இந்த ஆலயத்தில் சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தினர். குண்டு வீசித் தாக்கியதில் பேராலயம் பெரும் சேதத்தைச் சந்தித்தது.
காட்டுக்குள்
காட்டுப் பகுதியில் அமைந்துள்ள அழகான ஆலயம்தான் இந்த மடு அன்னை பேராலயம். இலங்கையின் கருப்பு வரலாற்றில் ஒரு அமைதி சாட்சியாக இந்த ஆலயம் நின்று கொண்டுள்ளது.
வருகிறார் போப்பாண்டவர்
இந்த ஆலயத்திற்கு போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் வருகை தரவுள்ளார். இது இப்பகுதி தமிழர்களிடையே கிறிஸ்தவர்களிடையே எழுச்சியையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்சே விரட்டப்பட்ட நிலையில்
தமிழர்களின் ரத்தம் படிந்த கறையுடன் வலம் வந்து கொண்டிருந்த, கொடுங்கோலன் ராஜபக்சே பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில், போப்பாண்டவர் இலங்கைக்கு வருகிறார். இது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கு.
பேராயரின் பெரு மகி்ழ்ச்சி
இந்த ஆலயத்தின் பேராயரான எமிலியனுஸ்பிள்ளை சாந்தி பிள்ளை கூறுகையில், புதன்கிழமை போப்பாண்டவர் இங்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தரவுள்ளார். அப்போது 5 லட்சம் பேர் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
20 வருடத்திற்குப் பிறகு
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு போப்பாண்டவர் ஒருவர் வருகிறார். கடந்த முறை 1995ம் ஆண்டு போப்பாண்டவர் ஜான் பால் இலங்கை வந்திருந்தார். ஆனால் அப்போது அவரால் மடு ஆலயத்திற்கு வர முடியாத நிலை. காரணம் போர் நடந்து கொண்டிருந்ததால். இந்த முறை போர் நின்று விட்டதால் போப்பாண்டவர் பிரான்சிஸ் வருகை தருகிறார்.
தமிழர்களின் நம்பிக்கை
தற்போதைய போப்பாண்டவர் மிகுந்த மனித நேயம் மிக்கவராக, ஏழைகளின் பால் இரங்குபவராக இருக்கிறார். மிகவும் எதார்த்தமாகவும் இருக்கிறார். எனவே அவரது வருகையால் இலங்கை அரசின் மனம் மாறி, தங்கள் மீது அது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியும், கோபமும் குறைந்து தங்களையும் சமமான மக்களாக பாவிக்க போப்பாண்டவரின் வருகை உதவும் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் உள்ளனர். தங்களது அவல நிலை மாற போப்பாண்டவர் குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கையிலும் இங்குள்ள தமிழ் மக்கள் உள்ளனர்.