வடக்கு இலங்கையில் ராணுவம் ஆக்கிரமித்த நிலங்கள்... 27 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களிடம் ஒப்படைப்பு!
இலங்கை வடக்குப் பகுதியில் உள்ள தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்க அந்த நாட்டு ராணுவம் முடிவு செய்துள்ளது.
கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில், சுமார் 54 ஏக்கர் நிலத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க அந்நாட்டு ராணுவம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போர் கடந்த 2009ல் முடிவுக்கு வந்தது. அப்போது சிறுபான்மையினரான தமிழர்கள் வசித்து வந்த நிலம் வீடுகள் உள்ளிட்டவை இலங்கை ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
இலங்கை அதிபராக மைத்ரி சிறிசேனா பொறுப்பேற்ற நிலையில் இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தில், முதல்கட்டமாக 54 ஏக்கர் நிலத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த முக்கிய மீன்பிடி துறைமுகமான யாழ்ப்பாணம் மீன்பிடி துறைமுகம் விடுவிப்படுகிறது.
54 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு
மேலும் பலாலி ராணுவ கண்டோன்ட்மெண்ட் பகுதியில் சுமார் 187 குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களிடம் 54 ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு
இலங்கையில் விடுதலைபுலிகள் இயக்கத்தினருக்கு எதிரான போரின்போது, 1990களில் வடக்கு பகுதியில் தமிழர்களின் பலநூறு ஏக்கர் நிலத்தை முகாம்கள் அமைப்பதற்காக ராணுவம் ஆக்கிரமித்து கொண்டது.போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இந்த நிலத்தை தமிழர்களிடம் இலங்கை ராணுவம் ஒப்படைக்கவில்லை.
ஒப்புதல்
2015-ம் ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி பெற்றபோது தமிழர்களிடம் ராணுவம் கையகப்படுத்திய நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். அதன்படி முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமித்த 35 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் ராணுவம் ஒப்படைத்தது.
முடிவுக்கு வந்த கட்டுப்பாடுகள்
அதைத்தொடர்ந்து பலாலி விமானப்படைத்தளம் மற்றும் காங்கேசன் துறை கடற்படை தளம் அருகே மேலிட்டி என்னும் மீன்பிடி துறைமுகம் பகுதியில் 187 தமிழர் குடும்பங்களின் நிலத்தை நேற்று ராணுவம் முறைப்படி ஒப்படைத்தது. இதன் மூலம் இந்த சிறிய மீன்பிடி துறைமுகத்தின் மீதான ராணுவத்தின் கட்டுப்பாடும் முடிவுக்கு வந்துள்ளது.