ஈழத்தில் சிங்கள ராணுவ தடையை உடைத்து மாவீரர் இல்லங்கள் சீரமைப்பு- நாளை மாவீரர் நாள்!
தமிழீழ மாவீரர் நாளையொட்டி ஈழத்தில் மாவீரர் இல்லங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்: ஈழத்தில் சிங்கள ராணுவத்தின் தடையை உடைத்து மாவீரர் துயிலும் இல்லங்களை பொதுமக்கள் சீரமைத்து வருகின்றனர்.
தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வு நாளை உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமாக கடைபிடிக்கப்பட இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இயங்கிய வரை நவம்பர் 27-ந் தேதி அதன் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றுவார்.
அதனைத் தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்க தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் மாவீரர் நினைவிடங்களில் ஈகைச் சுடரேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்.
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை சிங்கள ராணுவம் இடித்து தரைமட்டமாக்கியது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மாவீரர் நாள் நிகழ்வுகள் மீண்டும் எழுச்சியுடன் ஈழத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டும் மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் களைகட்டியிருக்கிறது. கனகராயன்குளம் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. சிங்கள ராணுவத்தின் தடையை மீறி மாவீரர் நாளை கடைபிடிக்க தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.