அலங்காநல்லூரில் மையம் கொண்ட ஜல்லிக்கட்டு புயல் யாழ்ப்பாணம் நல்லூரையும் தாக்கியது!
யாழ்ப்பாணம்: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகத்து மாணவர்கள், இளைஞர்களின் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் போராட்டம் வெடிக்கிறது. யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று மாலை தமிழகத்துக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.
தமிழீழத் தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு ஈழத் தமிழர்கள் ஆதரவு தருகின்றனர். தற்போது ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்கான போராட்டத்தில் தமிழகத்து இளைஞர்கள் வீதிக்கு வந்துள்ளனர்.
தமிழகத்தின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவில் முன்பாக நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரியம், பீட்டாவை தடை செய் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "அலங்கா 'நல்லூர்' ஆடும் வரை ஈழ 'நல்லூர்' அடங்காது", "தமிழனின் தனித்துவத்தை தடுக்காதே", "தலைகள் குனியும் நிலையில் இனியும் தமிழன் இல்லையடா", "பீட்டா என்ற இனத்தின் எதிரி - நின்று பார் எம் நெருப்பின் முன்னால்","பண்பாட்டை சிதைக்காதே - எம் பண்பாட்டை மறவோம்", ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கி இருந்தனர்.