சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்- நீதி கோரி ஈழத் தமிழர்கள் இன்று பேரணி
யாழ்ப்பாணம்: ஐ.நா.வின் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு இன்று இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பேரணிகள் நடைபெற உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 30-ந் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தத்தில் ராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 2009 இறுதி யுத்தத்தின் போது 30,000க்கும் அதிகமானோர் இலங்கை ராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பலரின் கதி இன்னமும் என்னவென்று தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களான பேபி சுப்பிரமணியம், ஈரோஸ் பாலகுமாரன், கவிஞர் புதுவை ரத்தினதுரை உள்ளிட்டோர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்!
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை தமிழர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் பலன் ஏதும் தராமலேயே போராடியவர்களே கூட மரணித்தும் போய்விட்டனர்.
ஆனாலும் ஈழத் தமிழர்களின் துயரத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு பேரணிகள் நடைபெற உள்ளன.
வவுனியாவில் இன்று காலை ஓமந்தை ராணுவ சாவடி வரை ஒரு பேரணியும் கிழக்கில் கல்முனையில் மற்றொரு பேரணியும் நடைபெற உள்ளது. இதேபோல் புலம் பெயர் நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.