இறந்து போன கேங் லீடர்.. கண்ணீர் விட்ட யானைகள்.. காட்டுக்குள் ஒரு கண்ணீர்!
இறந்த யானைக்கு 300 யானைகள் அஞ்சலி செலுத்தி இருக்கின்றன.
Recommended Video
கொழும்பு: நம் நாட்டில் எவ்வளவோ பேர் உறவின்றி தவிக்கிறோம்.. ஆதரவற்றவர்களாக இறக்கிறோம், அப்படியே இறந்தாலும் அடக்கம் செய்ய வரும் சொந்த பந்தங்களின் எண்ணிக்கை நாம் அறியோம். அப்படி இருக்கும்போது ஒரு இறந்த யானைக்கு சக யானைகள் அஞ்சலி செலுத்திய அபூர்வம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இலங்கையில் அநுராதாபுரம் பகுதியில் காலபோவா வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் நிறைய இருக்கும். கிட்டத்தட்ட 300 யானைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த 300 யானைகளுக்கும் ஒரு பெரிய காட்டு யானைதான் லீடர்!!
உடம்பெல்லாம் காயம்
இந்த லீடர் சொல்கிற மாதிரிதான் மற்ற யானைகள் இதுகாலம் வரை கேட்டு வந்திருக்கிறது. கேங் லீடர் செல்லும் பாதையில்தான் செல்லும், தூங்கும் மற்ற யானைகள் எல்லாம். இந்நிலையில், என்ன விரோதமோ, என்ன கோபமோ தெரியவில்லை, இந்த தலைவனை, மற்றொரு யானை கடந்த வாரம் பலமாக தாக்கி உள்ளது. அதனால் யானைக்கு உடம்பெல்லாம் பாளம் பாளமாக வெடித்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே வயது அதிகமாகவிட்ட யானைக்கு, காயங்களின் வலிகளை பொறுக்க முடியாமல் இருந்துள்ளது.
சுருண்டு விழுந்தது
நேற்று முன்தினம் இந்த தலைவர் யானை, வனப்பகுதியில் இருந்த ஒரு குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றது. அப்போது திடீரென்று, வயது முதிர்ச்சி மற்றும் ஏற்கனவே உடலில் இருந்த பல காயங்கள் காரணமாக குட்டையின் கரைப்பகுதியிலேயே மயங்கி விழுந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் துடித்து சுருண்டு உயிரிழந்தது.
ஒன்றுதிரண்ட யானைகள்
தங்களை இவ்வளவு நாள் வழிநடத்திய யானை உயிரிழந்துவிட்டதை அறிந்த மற்ற யானைகள் எல்லாம் ஒன்று திரள ஆரம்பித்தன. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தலைவனை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அதனை சுற்றி சுற்றி வந்தன. இறந்துகிடந்த யானையை தொட்டு தொட்டு தழுவின. அமைதியாக சிறிது நேரம் நின்று அஞ்சலி செலுத்தின. பின்னர் அங்கிருந்து யானைகள் கலைந்து சென்றன. இதேபோல் மேலும் சில யானை கூட்டங்கள் வந்தன.
அபூர்வ நிகழ்வு
அவைகளும் தன் தலைவனை சுற்றி வந்து, தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கேயே அசையாமல் நின்றன. இப்படியே மொத்தம் 300 யானைகளும் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றன. இறந்த யானைக்கு சக யானைகள் அஞ்சலி செலுத்திய காட்சிகளை கண்ட வன அதிகாரிகள் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டனர். மனிதர்களை போன்று மிருகங்களுக்கு இடையில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இடம்பெறுவது மிகவும் அபூர்வமானது என்று தெரிவித்தனர்.