2015: இலங்கையில் முடிவுக்கு வந்தது சர்வாதிகாரி ராஜபக்சேவின் சகாப்தம்...
கொழும்பு: இலங்கையின் மிக மோசமான சர்வாதிகாரியான போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரின் பேராதிக்கம் ஒடுக்கப்பட்டு அவர்களது சகாப்தம் முடிவுக்கு வந்த ஆண்டுதான் 2015.
இலங்கையில் 2005ஆம் ஆண்டு அதிபராக பதவிக்கு வந்தவர் மகிந்த ராஜபக்சே. அதிபர் பதவியைக் கைப்பற்றியது முதல் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் ராஜபக்சேவின் சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரும் ஆக்கிரமித்துக் கொள்ள ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தின் ஆட்சியே இலங்கைத் தீவில் கோலோச்சியது.
மாவிலாறு தொடங்கி...
2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மாவிலாறுவில் யுத்தத்தை தொடங்கினார் மகிந்த ராஜபக்சே. அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கம் தமிழீழ விடுதலைப் போரை ஒழித்துக் கட்டும் வகையிலான சர்வதேச ஆதரவை விரைவுபடுத்தினார் மகிந்த ராஜபக்சே.. விளைவு உக்கிரமான யுத்தம்
முள்ளிவாய்க்கால்...
அதுவும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் ராஜபக்சேவும் சர்வதேச நாடுகளும் நிகழ்த்திய உக்கிர வெறியாட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிடிபட்ட தமிழர்கள் ஈவிரக்கமின்றி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சகாப்தத்தை முடிவுக்கு வந்த கையோடு ஒட்டுமொத்த இலங்கை தீவையுமே தங்களது குடும்ப ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது ராஜபக்சே குடும்பம்.
அதிபர் தேர்தல்..
ராஜபக்சேவின் கொட்டத்துக்கு எதிராக சிங்களவர்களும் போர்க்கொடி தூக்க தொடங்கினர்.. அன்று முட்டுக்கொடுத்த சர்வதேச நாடுகளும் ராஜபக்சேவை தூக்கி எறிய முடிவு செய்தன.. இதன் விளைவாகத்தான் 2016ஆம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தல் நடைபெற்றது.
மைத்ரிபால சிறிசேன
இந்த தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக அவரது சொந்த கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலராக இருந்த மைத்ரிபால சிறிசேனவை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் களமிறக்கின. மைத்ரிபால சிறிசேனவுக்கு ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பெரும்பாலான சிங்களக் கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன. விளைவு... மகிந்த ராஜபக்சே என்ற கொடிய ஆட்சியாளரின் சகாப்தம் ஜனவரி 8-ந் தேதியுடன் இலங்கை தீவில் முடிவுக்கு வந்தது.
பிரதமராக ஆசை
இலங்கையின் புதிய அதிபராக சர்வதேச சமூகத்தின் ஏகோபித்த ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்றார். இதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ந் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிபர் பதவி வகித்த மகிந்த ராஜபக்சே மீண்டும் தலைதூக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுப் பார்த்தார்.
இலங்கையின் பிரதமராக தேர்வாகிவிட்டால் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்பதுதான் ராஜபக்சேவின் ஆசை. அத்துடன் ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் சிக்கி வழக்குகளை எதிர்நோக்கி காத்திருந்த குடும்பத்தினரைக் காப்பாற்றிவிடுவது என்பதும் மகிந்த ராஜபக்சேவின் நோக்கம்... ஆனால் ராஜபக்சேவால் எம்.பி.யாகத்தான் தேர்தலில் வெல்ல முடிந்தது. அவர் நினைத்தது போல பிரதமராக முடியவில்லை.
சவக்குழிதான்..
சர்வதேச நாடுகள் விரும்பிய வகையில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேதான் தேர்வானார். ஆக ஒட்டுமொத்தமாக அதிபர், பிரதமர் பதவிகளை மகிந்த ராஜபக்சே பெற்றுவிடாமல் அவரது ஒட்டுமொத்த அதிகார அரசியல் ஆசைகளுக்கு சவக்குழி தோண்டி ஆப்பு வைத்த ஆண்டுதான் 2015!