மைத்ரிபால அரசுக்கு டக்ளஸ், ஆறுமுகம் தொண்டமான் திடீர் ஆதரவு
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசுக்கு ஆதரவு தருவதாக மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தனர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி)யின் தலைவரான டக்ளஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆறுமுகம் தொண்டமான். அதிபர் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் ராஜபக்சே தோல்வியைத் தழுவினார்.
இதனால் கடந்த பல ஆண்டுகாலம் அமைச்சர் பதவி வகித்த இந்த இருவரும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர். இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
இந்நிலையில் டக்ளஸும் ஆறுமுகம் தொண்டமானும் திடீரென மைத்ரிபால அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் சரத் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.