மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால்... இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 'வார்னிங்'
மரண தண்டனை விவகாரத்தில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு: மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் வர்த்தக ரீதியான சலுகைகளை இலங்கை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவது 42 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிககி எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இலங்கை அதிபரின் இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியிருந்தன.
இந்த நிலையில் மரண தண்டனையை இலங்கை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் தங்களால் வழங்கப்பட்டு வந்த வர்த்தக ரீதியான சலுகைகளை இலங்கை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்றினால் 28 ஐரோப்பிய நாடுகளில் இலங்கை பெற்றிருக்கும் ஏற்றுமதிக்கான முன்னுரிமை வாய்ப்புகள் பறிபோகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.