இலங்கை ஆளும் கூட்டணியில் இணைந்தார் சரத்பொன்சேகா... விரைவில் அமைச்சராகிறார்
கொழும்பு: இலங்கையின் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டு அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவ தளபதியாக இருந்தவர் சரத்பொன்சேகா. 2009-ம் ஆம் ஆண்டு இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்தது.
இதன் பின்னர் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுடன் சரத்பொன்சேகாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பொன்சேகா, மகிந்த ராஜபக்சேவின் பரம எதிரியானார். ஜனநாயக கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியையும் தொடங்கினார்.
அங்கு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் ரணில்- மைத்ரிபால அணியை தீவிரமாக ஆதரித்தார். ரணில்- மைத்ரி கூட்டணி வென்று ஆட்சி அமைத்த போதும் அமைச்சரவையில் சரத்பொன்சேகா சேர்க்கப்படவில்லை.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது காரணமாக கூறப்பட்டது. சரத்பொன்சேகா மீது போர்க்குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவரை அமைச்சராக்கக் கூடாது என்பது இந்நாடுகளின் நிலைப்பாடு.
இந்நிலையில் அமெரிக்கா- இலங்கை இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ள நிலையில் ரணில்- மைத்ரி கூட்டணியில் நேற்று பொன்சேகா மீண்டும் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நியமன எம்.பியாக்கப்பட்டு அடுத்த வாரம் அமைச்சராக பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது.