உக்ரைனுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத விநியோகம்: சிக்கினார் ராஜபக்சே உறவினர்!!
கொழும்பு: உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதருமான உதயங்கா வீரதுங்கா மீது விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர் உதயங்கா வீரதுங்கா. இவர் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார்.
ஆனால் ராஜபக்சே இலங்கையின் அதிபரான போது உணவு விடுதி நடத்திய உதயதுங்காவை ரஷ்யாவுக்கான இலங்கை தூதராக்கினார். மொத்தம் 9 ஆண்டுகாலம் இலங்கை தூதராக அவர் பணியாற்றினார்.
அண்மையில் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உதயதுங்கா தலைமறைவானார். அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் உக்ரேன் அரசு உதயங்கா வீரதுங்கா மீது முறைப்படி புகார் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதராக இருந்த போது உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப்படைக்கான மிக்-27 ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்ததிலும் முறைகேடுகள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறுகையில், இந்த விவகாரத்தில் நாங்கள் முழுமையான விசாரணை நடத்துவோம் என்றார்.